கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று
தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர்
நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த
நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல்
அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.
ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.
இந்தியா
என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும்
தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின்
பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க
முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
பிரிவினைக்குக்
காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும்
காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை
தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு,
விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம்
கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான்
பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக
பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு
இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின்
நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப்
பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

ஆனால்
மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம்
கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு
நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று
நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும்
ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர
தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று
அறிந்திருக்கவில்லை.
இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.
தமிழர்களாகிய
நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து
கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள
தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.
1947 ஜூன் 3
அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு
அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த
அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில்
சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான்
மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.
ஜூன்
18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை
மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும்
மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர்
குழுக்களை நியமித்தது அவை:
1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள்குழு 1
7. பொருளாதார உறவுகள்குழு 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10. ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.
1947
ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது.
பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.
இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.
பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:
1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்
வங்காள பவுண்டரி கமிஷன்:
1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்
ஒவ்வொரு
குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும்
நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை
கவனிக்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை
இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை,
மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை
இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய
மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.
இரண்டு கமிஷன்களில் இருந்த
உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள்
நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர்
சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.
1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.
இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.
ஆகஸ்டு
17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை
(இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும்
முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக்
கொண்டனர்.
ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம்
மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை
அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின்
குரூர நகைச்சுவையாகும்.
இடம்பெயர்தல்:நடுவில்
கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு
முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப
லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை.
ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த
கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.
ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
No comments:
Post a Comment